
உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!
கொரோனாவில் இருந்து விடுபட வேண்டுமென்றால் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் பெட்ரோஸ் அதனாம் தெரிவித்துள்ளார்.
சுவிஸ்லாந்தின் ஜெனிவா நகரில் அமைந்துள்ள அமைப்பின் தலைமையகத்தில் இருந்து காணொளி மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
உலகின் பல்வேறு நாடுகள் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு மருந்து விவகாரத்தில் தேசியவாதத்தை காட்டுவது மிகவும் தவறானதாகும்.
அத்தகைய சுயநலத்தால் யாருக்கும் நன்மை ஏற்படாது. நோய்களிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.
தற்போதெல்லாம் அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது.
இத்தகைய சூழலில் மற்றைய நாடுகளில் கொரோனா பரவி கொண்டிருந்தாலும் தங்கள் நாட்டுக்கு மட்டும் பாதுகாப்பு தேடுவது மிகவும் தவறு என்று அவர் தெரிவித்துள்ளார்.