வெளிநாட்டு நாணயத்தில் பணப் பரிவர்த்தனை! மத்திய வங்கி வெளியிட்ட எச்சரிக்கை
நாட்டு மக்கள் இடையிலான அனைத்து பரிவர்த்தனைகளும் இலங்கை ரூபாயில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இது இலங்கை மத்திய வங்கி சட்டம் எண் 16 of 2023-ன் படி கட்டாயமானது என வங்கி தெரிவித்துள்ளது.
சிலர் நாட்டிற்குள் வெளிநாட்டு நாணயத்தில் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், உள்ளூர் வணிகர்கள் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் (Foreign Currency Accounts) கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் வழியாகவும் பணம் ஏற்க அனுமதி வழங்கப்படவில்லை என்றும் மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
அனுமதி இன்றி உள்ளூர் வணிகருக்கு வெளிநாட்டு நாணயத்தில் பணம் செலுத்தும் குடியிருப்பாளரும், அத்தகைய பணத்தை ஏற்கும் வணிகரும் மத்திய வங்கி சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவர்களாக கருதப்படுவர்.

இத்தகைய குற்றச்சாட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ரூ. 2.5 கோடி (25 மில்லியன்) அபராதம், அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
கடுமையான சட்ட விளைவுகளைத் தவிர்க்க, பொதுமக்களும் வணிகர்களும் சட்ட விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
