நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் விடுக்கப்பட்ட முக்கிய அறிவுறுத்தல்
நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் நிலுவையில் இருக்கும் மருந்துகள் தொடர்பில் மாதாந்தம் அறிக்கை தயார் செய்யப்பட வேண்டும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி அறிவுறுத்தியுள்ளார்.
இதனூடாக, மருந்து தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என சூரியன் செய்தி சேவைக்கு, பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, மாகாண வைத்தியசாலைகள் மாகாண அமைச்சிடமும், மத்திய அரசின் பொறுப்பிலுள்ள மருத்துவமனைகள் மத்திய சுகாதார அமைச்சிடமும் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
மருந்து விநியோகப் பிரிவுக்கு இந்த தரவுகள் மாதாந்தம் கிடைக்கும் போது, அதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் அனேகமான பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று தொடர்பிலும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.
அதன்படி, தேவையான மாதிரிகள் பெறப்பட்டு தமது ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், பாரிய நோய்த்தொற்று தொடர்பான எந்த வித அச்சுறுத்தலும் நாட்டில் ஏற்படவில்லை எனவும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார்.