ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: பெற்ற மகனை முறையாக வளர்க்க தவறியவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ரமேஷ் காட்டம்

ஆபாச பேச்சுதான் தி.மு.க-வின் DNA: பெற்ற மகனை முறையாக வளர்க்க தவறியவர் மு.க.ஸ்டாலின்- அமைச்சர் ரமேஷ் காட்டம்

கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசியல் களத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தி.மு.க தலைவர்களின் விவாதங்கள் மேடைப்பேச்சுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கும், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம்

முதலமைச்சர் விஜய்  வெளிநாட்டுப் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகளுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ரமேஷ், அரசியல் நாகரிகமின்றி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது என கண்டித்துள்ளார். பொறுப்பற்ற முறையிலும் வரம்பு மீறியும் பேசி வருவதால்தான் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் எதிர்க்கட்சி வரிசைக்கான வாய்ப்பு கூடக் கிடைக்காமல் போனது என்றும், பொறுப்புள்ள தலைவர்கள் பேசும் பேச்சில் அரசியல் முதிர்ச்சி இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தி.மு.க-வின் அரசியல் கலாசாரம்

தி.மு.க-வினரின் மேடைப் பேச்சுகளை கடுமையாகச் சாடிய அமைச்சர் ரமேஷ், ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதுதான் தி.மு.க-வின் அரசியல் கலாசாரமாக மாறியுள்ளது என குற்றம்சாட்டினார். தி.மு.க-வினர் மேடைகளில் ஆபாசமாகப் பேசவில்லை என்றால்தான் அது ஆச்சரியப்பட வேண்டிய விஷயம். ஆபாசப் பேச்சுதான் தி.மு.க-வின் DNA. எதிர்கட்சித்தலைவர் உதயநிதியே இரட்டை அர்த்தத்தில் பேசக்கூடியவர். அந்த வழியில் வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சிலும் எந்த அரசியல் அறமும் இல்லை. பேச்சில் சிறிதும் அறமில்லாத ஒருவர் எப்படி  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்திருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

கட்சியை எப்படி ஒழுங்காக வைத்திருப்பார்?

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரமேஷ், தான் பெற்ற மகனையே ஒழுங்காகவும் முறையாகவும் வளர்க்காத மு.க.ஸ்டாலின், தனது கட்சியினரை எவ்வாறு கட்டுப்பாட்டுடனும் ஒழுங்காகவும் வைத்திருப்பார் என எதிர்பார்க்க முடியும்?

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகத்தான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதா. கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க ஆட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முறையாகப் பராமரிக்கத் தவறிய தி.மு.க அரசு, மற்றவர்களை விமர்சிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் அமைச்சர் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.