
தங்கத்தின் மூலம் பரவுகிறதா கொரோனா?புதிதாக எழுந்தது சந்தேகம்
நகைப்பட்டறை தொழிலாளர்கள், நகைக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் என தங்கத்துடன் தொடர்புடையவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் ஏற்பட்டு வருவதால் தங்கம் மூலம் கொரோனா தொற்று பரவுகிறதா? என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.
கோவையில் தங்க நகைப்பட்டறைகளில் பணியாற்றி வந்த 120க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தொடர்ந்து தங்க நகைப்பட்டறைகள், நகைக் கடைகள் நிறைந்துள்ள பகுதிகளில் தினமும் 50 முதல் 100 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவையில் பிரபலமான நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். சமீப காலமாக கோவையில் நகைக்கடைகள், நகைப்பட்டறைகளில் வேலை பார்ப்பவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு அதிகளவில் கொரோனா பரவி வருகிறது.
இதனால் தங்க நகைகள் மூலம் கொரோனா பரவுகிறதோ என்ற சந்தேகம் சுகாதாரத்துறைக்கு எழுந்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தங்கம் உள்ளிட்ட உலோகங்களில் 10 நாட்கள் வரை கொரோனா வைரஸ் உயிருடன் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் நகைக்கடைகள், பட்டறைகளில் நகையை அனைவரும் தொடுவதன் மூலம் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதில் பரவ வாய்ப்புள்ளது.
எனவே 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கடை முழுவதும் கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். முடிந்த வரையில் கடைகளில் அதிகளவில் ஆட்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களும் அவசியமின்றி கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் ஒன்றிரண்டு பேர் மட்டுமே செல்லலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.