பாடசாலைகளை மூடுவதற்கு தென்கொரியா நடவடிக்கை

பாடசாலைகளை மூடுவதற்கு தென்கொரியா நடவடிக்கை

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கின்றமை காரணமாக தலைநகர் சோலில் உள்ள அனைத்து பாடசாலைகளையும், பாலர் பாடசாலைகளையும் மூடுவதற்கு தென்கொரியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சோலில் கடந்த இரண்டு வாரங்களாக அதிகாரிகள், மாணவர்கள் என சுமார் 200 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொலைநிலை கற்றல் நடவடிக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதிவரை நீடிக்கும் என தென்கொரிய கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 தொற்று நாடுதழுவிய ரீதியில் தீவிரமடையும் ஆபத்து உள்ளதாக தென்கொரிய சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தென்கொரியாவில் கடந்த மே மாதம் 20 ஆம் திகதியும், ஜுன் மாதம் முதலாம் திகதியும் பாடசாலைகள் கட்டம் கட்டமாக திறக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சோலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் இதுவரையில் 17 ஆயிரத்து 945 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ள நிலையில், 310 பேர் உயிரிழந்துள்ளதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.