
கொரோனா அறிவியல் பிரச்சினை: அரசியல் பிரச்சினை கிடையாது: சர்வதேச விசாரணைக்கு உடன்பட்டது சீனா!
கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரமான விசாரணையை சீனா ஆதரிப்பதாக ரஷியாவுக்கான சீன தூதுவர் ஜாங் ஹன்குய் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட 100 இற்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய விசாரணைக்கு தங்களது ஆதரவை தெரிவித்திருந்தன. இந்நிலையில் மாஸ்கோவில் நேற்றையதினம் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இது தொடர்பில் பேசியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்.
கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றிய உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரமான விசாரணையை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், முன்கூட்டியே குற்றம் சுமத்தும் மன நிலையில் இந்த விசாரணையை நடத்துவதற்கு நாங்கள் எதிரானவர்கள்.
இந்த விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துடனும் சரி, உலக நாடுகளுடனும் சரி சீனா ஒத்துழைக்க தயாராக இருக்கிறது. அது எங்கள் கடமை. ஆனால், கொரோனா வைரசின் தோற்றத்தை தீர்மானிப்பது ஒரு அறிவியல் பிரச்சினை. அது அரசியல் பிரச்சினை அல்லவென அவர் தெரிவித்துள்ளார்.