
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டம்
சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சிறுவர் துஷ்பிரயோகங்களின் எண்ணிக்கை இவ்வருடம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகார சபையின் பேராசிரியர் முதித விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் 8 ஆயிரத்து 558 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன என்றும் எனினும் இவ்வருடத்தின் கடந்த 8 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 4 ஆயிரத்து 500 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இணையத்தளத்தின் ஊடாக சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர் துஷ்பிரயோகங்கள் இணையத்தளத்தை பயன்படுத்தியும் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. இதனால் தொழிநுட்ப உதவிகளை பெற்று அவற்றை தடுப்பதற்கான வழிவகைகளும் முன்னெடுக்கப்படும்.
சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதை தடுப்பதற்கான விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமென சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித விதானபத்திரன தெரிவித்துள்ளார்.