கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த கும்பல்

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த கும்பல்

கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த பெண் உள்ளிட்ட 5 பேர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண் பலரிடம் இருந்து சுமார் 50 இலட்சம் ரூபா வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அவரது விளம்பரத்திற்கு ஏற்ப தொடர்புக்கொண்டவர்கள், வங்கி கணக்குகளைத் திறந்து கடவுச்சீட்டு மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல்களை மட்டும் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டனர்.

இதையடுத்து அந்த பெண் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, வைப்புத்தொகையாளர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தற்போது இந்த மோசடிகள் கந்தான, நிட்டம்புவ, அனுராதபுரம், காலி, கொழும்பு, கிரிஉல்ல மற்றும் ராகம ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கந்தான, ரத்தொழுகம, மாரவில, மெல்சிறிபுர மற்றும் கல்குளம் ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை தொடர்ந்து எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறான மோசடிகள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 0112 32 69 79 என்ற இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு குறித்த திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.