“இந்த வலிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” -கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் சகோதரர் உருக்கம்

“இந்த வலிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்” -கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் சகோதரர் உருக்கம்

“ ஒவ்வொரு முறையும் காரணமின்றி கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த வலிக்கு நீங்கள்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என அமெரிக்காவில் கொல்லப்பட்ட கறுப்பினத்தவரின் சகோதரர் உருக்கமான உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த மே மாதம் அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் எனும் பகுதியில் வெள்ளையின காவல்துறை அதிகாரியால் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் பிளாய்ட் (46) கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அந்நாடு முழுக்க போராட்டம் வலுத்து வருகிறது.

அந்தக் கொலையில் தொடர்புடைய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவருக்காக நேற்று நடைபெற்ற நீதி விசாரணையில் அவரின் சகோதரர் பிளோனிஸ் ப்ளாய்ட் (42) மிகவும் உணர்வு பூர்வமாகப் பேசியதும், காவல்துறையை சீர்த்திருத்துவது பற்றி கருத்து தெரிவித்ததும் முக்கியத்துவமிக்கதாகப் பார்க்கப்படுகிறது.

அவர் பேசுகையில், “நான் மிகவும் சோர்ந்து போயுள்ளேன். தற்போது நான் உணரும் வலியால் ரொம்பவும் சோர்ந்து போய்விட்டேன். ஒவ்வொரு முறையும் காரணமின்றி கறுப்பினத்தவர்கள் கொல்லப்படுவதை உணரும்போது அந்த வலி என்னை இன்னும் சோர்வடையச் செய்கிறது.

இந்த வலிக்கு நீங்கள்தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாங்கள் சோர்ந்து போவதை விட்டும் நீங்கள் தடுக்க வேண்டும்.

உதவி கேட்ட ஜோர்ஜின் குரல் அலட்சியப்படுத்தப்பட்டது. தயவுகூர்ந்து என்னுடைய குரலுக்கும் எங்கள் குடும்பத்தின் குரலுக்கும் உலகெங்கும் வீதிகளில் ஒலித்துக்கொண்டிருக்கும் குரலுக்கும் காது கொடுங்கள்.

ஜோர்ஜின் குழந்தைகள் அந்த வீடியோவைப் பார்க்கவேண்டியுள்ளது. எந்த மனிதனுக்கு நீங்கள் இப்படிச் செய்துவிடக் கூடாது. அவரது உயிர் பொருட்படுத்தத்தக்கது. எல்லா உயிர்களும் முக்கியமானவை. கறுப்பினத்தவர் உயிர்களும் பொருட்படுத்தத்தக்கவை.”

இவ்வாறு அவர் பேசியது உலக மக்களின் மனச்சாட்சியை உலுக்கும் வகையில் அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.