
ஒப்பந்தத்தை மீறி எல்லையில் சீனப் படைகளைக் குவிக்கக் கூடாது- சீனாவிடம் இந்தியா வலியுறுத்து
இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி எல்லையில் சீனப் படைகளைக் குவிக்கக் கூடாது என மொஸ்கோவில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றுள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத் துறை அமைச்சரை மொஸ்கோவில் சந்தித்துப் பேசியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
இந்த பேச்சுவார்த்தையின்போது எல்லைப் பிரச்சினை குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சீனா வெளியிட்ட அறிக்கையில், லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்திற்கு இந்தியாதான் காரணம் என்றும், இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரித்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கையில், “இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன ஜனாதிபதி ஷி-ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பின்போது எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை செயற்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இருதரப்பு ஒப்பந்தங்களைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முன்னணி துருப்புக்களின் கட்டுப்பாட்டை வலுப்படுத்த வேண்டும். ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது” என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவுகளில், “சீனா அமைதியாக இருக்க வேண்டும், நிலைமையை சிக்கலாக்கும் அல்லது எல்லைப் பகுதிகளில் பதற்றத்தை அதிகரிக்கக் கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.
எல்லையில் அத்துமீறுவது சீனாதான் என மொஸ்கோ சந்திப்பின்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். படைக் குவிப்பு, ஆத்திரமூட்டும் நடவடிக்கை, எல்லையில் நிலைமையை தன்னிச்சையாக மாற்றும் முயற்சி போன்ற சீனாவின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கை இருதரப்பு ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது. இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி எல்லையில் சீனா படைகளைக் குவிக்கக் கூடாது என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய எல்லை மற்றும் இறையாண்மை உறுதியுடன் பாதுகாக்கப்படும். எல்லைப் பிரச்சினை தொடர்பாக ராஜதந்திர ரீதியாகவும், இராணுவ நிலையிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முழு அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். எல்லை நிர்வாகத்தில் இந்தியப் படை எப்போதும் மிகவும் பொறுப்பான அணுகுமுறையை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.