
பங்களாதேஷில் மசூதிக்கு அருகே எரிவாயு குழாய் வெடித்ததில் 13பேர் உயிரிழப்பு: 30பேர் காயம்!
பங்களாதேஷில் மசூதிக்கு அருகே எரிவாயு குழாய் வெடித்ததில் 13பேர் உயிரிழந்ததோடு, 30பேர் காயமடைந்துள்ளனர்.
எரிவாயு குழாயில் இருந்து கசிவு ஏற்பட்டதாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் சந்தேகிக்கும் இந்த வெடிப்பு, நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு தலைநகர் டாக்காவிற்கு வெளியே நாராயங்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மசூதியில் ஏற்பட்டது.
டசன் கணக்கானவர்கள் டாக்காவின் அரசு நடத்தும் சிறப்பு தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் கடுமையான தீக்காயங்களுடன் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தீக்காயங்கள் ஏற்பட்டு ஏழு வயது குழந்தை உட்பட 13பேர் உயிரிழந்துவிட்டதாக தீக்காயங்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் சமந்தா லால் சென் தெரிவித்தார்.
அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அவர் கூறினார்.
குழாய் கசிந்த பின்னர் மசூதியில் குவிக்கப்பட்ட எரிவாயு குண்டுவெடிப்பைத் தூண்டக்கூடும் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மூத்த தீயணைப்பு சேவை அதிகாரி அப்துல்லா அல் அரேபின் கூறுகையில்,
‘ஜன்னல்கள் மூடப்பட்டதிலிருந்து குழாயிலிருந்து எரிவாயு கசிந்து மசூதிக்குள் குவிந்ததாக நாங்கள் முதன்மையாக சந்தேகிக்கிறோம். காற்று சீராக்கி இயக்கப்பட்டபோது, தீப்பொறிகள் காரணமாக எரிவாயு வெடித்திருக்கக்கூடும்’ என கூறினார்.
இந்த சம்பவத்தின் போது மசூதியில் உள்ள ஆறு காற்று சீராக்கிகளும் வெடித்தன. வெடிப்பு குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பங்களாதேஷில், கட்டுமான விதிமுறைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் பெரும்பாலும் மீறப்படுகின்றன. 168 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் தீ வீபத்தில் உயிரிழக்கின்றனர்.
கடந்த ஆண்டு பெப்ரவரியில், டாக்காவில் பழைய கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 78பேர் உயிரிழந்தனர். ஒரு மாதத்திற்குப் பிறகு, நகரத்தில் ஒரு அலுவலக கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.