
ஈரானில் பல மடங்கு அதிக செறிவூட்டப்பட்ட யூரேனியம்: உலக நாடுகள் அதிர்ச்சி!
ஈரான் பல மடங்கு அதிக செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை வைத்துள்ளதாக, ஐ.நா.வின் சர்வதேச அணு சக்தி முகமை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஈரான் வசம் தற்போது 2,105 கிலோ செறிவூட்டப்பட்ட யூரேனியம் உள்ளதாகவும், சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவைக் காட்டிலும் இது பல மடங்கு அதிகம் எனவும் அணு சக்தி முகமை குறிப்பிட்டுள்ளது. ஒப்புக் கொள்ளப்பட்ட அளவு 300 கிலோ ஆகும்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீறி போர்டோ அணு மின் நிலையத்தில் அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் யூரேனியம் செறிவூட்டல் பணியை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, சந்தேகத்துக்குரிய இரண்டு முன்னாள் அணுக்கருத் தளங்களைப் பார்வையிட சர்வதேச அணுசக்தி முகமையை ஈரான் அனுமதித்தது. இந்த நிலையில் தற்போது அணு சக்தி முகமை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இரண்டாவது தளத்தில் இந்த மாத இறுதியில் சோதனை செய்யப்படும் என அந்த முகமை தெரிவித்துள்ளது.
ஆனால், தனது அணுக்கரு திட்டங்கள் அனைத்தும் அமைதிக்கானவை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், அணு ஆயுத பாதுகாப்பு குறித்து நிலவி வரும் சர்வதேசப் பிரச்சனையை சரி செய்ய நல்ல எண்ணத்தில் ஆயுத கண்காணிப்பாளர்கள் அணுக்கருத் தளத்தை சோதனையிட அனுமதி வழங்கியதாக ஈரான் கூறியுள்ளது.
அணு ஆயுதம் ஒன்றை தயாரிக்க இரான் 1,050 கிலோ வரையிலான 3.67 சதவீதம் செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை தயாரிக்க வேண்டும். மேலும், அதை 90 சதவீதட் செறிவூட்ட வேண்டும் என அமெரிக்காவை சேர்ந்த ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
யூரேனியம், புளூட்டோனியம் போன்ற கதிர்வீச்சுள்ள சமதானி அணுக்களே, அணுகுண்டு, அணு உலை, போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.