பிரான்ஸில் அவதிப்படும் நோயாளி! சாகும் காட்சி முகநூலில் நேரலை

பிரான்ஸில் அவதிப்படும் நோயாளி! சாகும் காட்சி முகநூலில் நேரலை

பிரான்ஸில் குணப்படுத்த முடியாத கொடிய நோயினால் 34 ஆண்டுகளாக அவதிப்படும் நோயாளி ஒருவர் தானாகவே உயிர் துறப்பதற்கு முடிவு செய்திருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஜோன் பிராந்தியத்தைச் சேர்ந்த 57 வயதான அலெய்ன் கோக் என்ற நோயாளியே உயிர் துறக்கப் போவதான முடிவை வெள்ளிக்கிழமை இரவு முகநூல் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

மருத்துவப் படுக்கையில் கிடந்தவாறு பெற்றுவரும் நீராகார உணவினையும் மருந்துகளையும் நிறுத்திக் கொண்டு மெதுவாகச் சாவதற்குத் தயாராகும் முடிவை முகநூல் நேரலை மூலம் நாட்டுக்கு அறிவித்திருக்கும் அவர்,

தான் சாகும் வரையான நிலைமைகளை தொடர்ந்து அனைவரும் காண வசதியாக அதனை முகநூலில் நேரலைக் காணொலியாக விட்டுள்ளார்.

குணப்படுத்த முடியாத இரத்த நாள நோயினால் பீடிக்கப்பட்டு 34ஆண்டுகள் படுத்த படுக்கையில் கிடக்கும் இவர் தனது வலி நிறைந்த வாழ்வை நிறைவு செய்யக்கோரி நீண்ட காலமாக போராடி வருகிறார்.

உயிர் துறப்பதற்கு உதவுமாறு கோரி நாட்டின் அதிபர் மக்ரோனிடம் இறுதியாக விடுத்த வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொள்ளாததை அடுத்தே உணவையும் மருந்துகளையும் துண்டித்துக் கொண்டு தானாகவே தனது உயிரை மெதுவாக மாய்க்க முடிவு செய்துள்ளார்.

சட்டங்களுக்கும் மனிதாபிமானத்துக்கும் பெரும் சவாலாக மாறியிருக்கும் ஒரு நோயாளியின் இந்த அவலம் பிரான்ஸ் மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருக்கிறமை குறிப்படத்தக்கது.