
கொரோனா பரவல் விடயத்தில் எதையும் மூடி மறைக்கவில்லை -சீன ஜனாதிபதி வெளிப்படையாக அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விவகாரத்தில் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொடியதொற்றான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதுவரையில் இந்த வைரசிற்கு தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரவில்லை. கொரோனா பரவலால் உலக நாடுகளின் பொருளாதாரமும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது. பாதிப்புகள் அனைத்திற்கும் சீனாதான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
மேலும், கொரோனா பற்றிய உண்மையான தகவல்களை சீனா மறைத்து விட்டதால்தான் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ச்சியாக கூறி வந்தார்.
இந்தநிலையில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியதாவது:
கொரோனா பரவத் தொடங்கிய நாள்முதல் சீனா வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டது. உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்ற உதவும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில், சீனாவில் பொருளாதாரத்தை மீட்டு வளர்ச்சியை நோக்கி திருப்பியுள்ளோம். இது நாட்டின் வலுவான திறனையும், மக்களின் ஆதரவையும் நிரூபிக்கும் வகையில் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.