படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன?

படையினர் வசமுள்ள மக்களின் காணிகள் தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்ன?

வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான முக்கியமான காணிகள் மீளவும் அவர்களிடம் கையளிக்கப்படமாட்டாது என கோட்டாபய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த தகவலை ராஜாங்க அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

விக்னேஸ்வரன் போன்ற பிரிவினைவாத நிகழ்ச்சிநிரலை கொண்டவர்கள் உள்ளவரை பாதுகாப்பு அடிப்படையில் முக்கியமான பகுதிகளை மீள ஒப்படைக்கப்போவதில்லை.

எங்கிருந்தோ வந்த பௌத்த மதகுரு ஒருவர் தொல்லியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி என தெரிவித்து விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுவதை தடுத்துள்ளார் என விக்னேஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

பௌத்த மதகுருமார்கள் படையெடுப்பாளர்களோ அல்லதுஆக்கிரமிப்பாளர்களோ இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், அவர்கள் இந்த சமூகத்தின் ஒரு பகுதி அவர்களுக்கு பௌத்த சிங்கள பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான உரிமையுண்டு எனவும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் உள்ள பெறுமதியான நிலங்களை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள சரத்வீரசேகர படையினர் வசமிருந்த 90 வீதமான நிலங்கள் மீள ஒப்படைக்கப்ட்டுவிட்டன என என்னால் உறுதி செய்யமுடியும்.

விக்னேஸ்வரன் பலாலியில் விமானங்கள் இறங்கும் ஓடுபாதையையே கோருகின்றார் என நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ள அவர் அந்த பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் இரண்டு விமானங்களை சுட்டுவீழ்த்தியிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பகுதிகள் மூலோபாய ரீதியில் முக்கியமானவை என தெரிவித்துள்ள சரத்வீரசேகர விக்னேஸ்வரன் போன்ற பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பவர்கள் உள்ளவரை அவற்றை மீள வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.