
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் நடந்தது என்ன? மாலுமி வெளியிட்ட தகவல்கள்!
அம்பாறை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலின் மாலுமி கடந்த ஆறுநாட்களாக கல்முனை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில், தனக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்கள் தாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது சார்பிலும் எனது பிலிப்பைன்ஸ் நாட்டின் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அம்பாறை சங்கமன்கண்டிக் கடற்பரப்பில் எரிந்துகொண்டிருந்த கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க மாலுமி ஸ்ரீலங்கா கடற்படையினரால் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு 3மணிநேரம் சத்திரசிகிச்சை நிபுணர் எஸ்.சிறிநீதன் தலைமையிலான குழுவினரால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, பின்னர் அதிதீவீர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு கொழும்பு லங்கா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதன் போது, கப்பல் தீப்பற்றிய போது ஏற்பட்ட அனுபவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. செப்டெம்பர் 3 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7மணியளவில் வழமைபோல எழுந்தவுடன் உணவு உண்பதற்காக கப்பலிலுள்ள சமையலறைக்குச் சென்றேன். அங்கு நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தேன்.
சுமார் 15நிமிட நேரத்தின் பின்னர் குளிப்பதற்காக குளியலறைக்குச் சென்று குளித்து முடித்துவிட்டு வெளியேறிய போது கப்பலில் பாரிய வெடிச்சத்தம் கேட்டது. அவ்வளவுதான் வேறேதும் நினைவில்லை.
யாரோ என்னைத் தாக்குவது போன்று உணர்ந்தேன். கப்பலில் ஒருபகுதி எரிவதைக்கண்டேன். பின்பு எதுவும் நினைவில்லை. இருந்தும் இன்னும் நான் உயிர்வாழ்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.
உண்மையில் இலங்கை மக்கள் இலங்கை கடற்படை, விமானப்படையினர் எல்லாம் பாராட்டுக்குரியவர்கள். குறிப்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் ஏனையோர் என்னைப் பராமரித்தவிதம் மிகவும் கவர்ந்தது. வீட்டிலும் அப்படி கவனிப்பு இருக்காது. அந்தளவிற்கு கவனித்தார்கள். அனைவருக்கும் நன்றிகள் எனவும் தெரிவித்தார்.