
தேர்வுகளும், மதிப்பெண்களும் தான் அறிவை அளவீடு செய்யும் அளவுக்கோலா – நரேந்திர மோடி கேள்வி!
தேர்வுகளும், மதிப்பெண்களும் தான் ஒரு மாணவனுடைய அறிவை அளவீடு செய்யும் அளவுக்கோலா என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் பள்ளிக் கல்வி பற்றிய மாநாட்டில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்படி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “வெளியுலகில் மாணவர்கள் கற்க வேண்டிய விடயங்கள் அதிகம் உள்ளன. கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.
பெற்றோர்கள் பிள்ளைகளோடு உரையாடும் போது நீ என்ன கற்றாய் என்று கேட்பதில்லை. மாறாக எத்தனை மதிப்பெண்கள் எடுத்தாய் என்றுதான் கேட்கின்றனர். தேர்வுகளும், மதிப்பெண்களும்தான் ஒரு மாணவனுடைய அறிவை அளவீடு செய்வதற்கான அளவுகோலா?
மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். சுற்றுச்சூழல் பற்றிய அறிவு மாணவர்களுக்கு மிகவும் முக்கியம். வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், விவசாய நிலங்கள் என பல இடங்களில் மாணவர்களுக்கு அறிவை புகட்ட முடியும்.
மாணவர்களால் சக மாணவர்கள் பெயரை எவ்வளவு வேகமாக சொல்ல முடியும்? தலைவர்களின் படங்கள் பார்த்து மாணவர்கள் வேகமாக பெயரை சொல்லும் அளவிற்கு பழக்க வேண்டும். நான்கு சுவர்களுக்குள் மாணவர்கள் படிக்கும் நிலையை மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.