
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற மஞ்சள் கட்டிகளுடன் மூவர் கைது
தமிழகத்தில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சித்த ஆயிரம் கிலோகிராம் மஞ்சள் கட்டிகள், மண்டபம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன், சந்தேக நபர்கள் மூவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மிளகு, மஞ்சள் கடத்த உள்ளதாக ராமேஸ்வரம் மெரைன் காவல் ஆய்வாளருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில், மண்டபம் மெரைன் காவல் நிலைய காவலர்கள் வேதாளை கடற்கரைக்கு சென்று இன்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, அங்கு பயணித்த பாரவூர்தி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதிலிருந்து 34 பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த ஆயிரம் கிலோகிராம் மஞ்சள் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், சாரதி உட்பட 3 சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.