
பன்னாடுகளுக்கு விற்கப்படும் ஸ்ரீலங்கா - எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு
அரசு நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போதுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்து பின்னர் அவர்கள் நாடாளுமன்ற தேர்தலிலும் பாரிய வெற்றியை தனதாக்கியுள்ளனர்.
நாட்டில் பெரிய பொருளாதார பிரச்சினை நிலவுகின்றது. மக்களுக்கு செய்வேன் என கூறிய செயற்றிட்டங்களை ஒன்றைக்கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலிலும் சரி, நிறைவடைந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் சரி சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அதிகமாக பேசினார்கள்.
சுற்றுக்சூழலின் பெரும்பாலான பகுதிகள் முழுமையாக அழிந்துள்ளன. சுற்றுச்சூழல் குறித்தே அரசாங்கத்தில் அதிகமானோர் பேசினர்.
ஆனால், இன்று என்ன நடந்துள்ளது. தேர்தலிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக பேசினார்கள், காடழிப்பு உள்ளிட்ட சுற்றுச்சூழலில் பாதிப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.
வில்பத்து வனத்தை நாசப்படுத்திய முக்கிய சந்தேகநபருக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியவரே அதற்கு எதிராக தற்போது செயற்படுகிறார்.
இந்த நாடு மிகவும் பெறுமதிமிக்கது. இருப்பினும் அரச நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.