
அமெரிக்காவில் அதிக மருத்துவ பரிசோதனைகள்: நரேந்திர மோடி பாராட்டியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிக மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டினார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் சூடுப்பிடித்துள்ளது.
குறித்த தேர்தல் பிரசாரங்களில் ஜனநாயகக் கட்சி, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், கொரோனா தொடர்பில் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.
இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நெவாடா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்ட டொனால் ட்ரம்ப், கொரோனா வைரஸ் தொடர்பில் முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் டொனால் ட்ரம்ப் மேலும் கூறியுள்ளதாவது, உலகிலேயே கொரோனா வைரஸுக்கான மருத்துவ பரிசோதனைகள், அமெரிக்காவில்தான் அதிகமாக செய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவை விட நாம், 4.4 கோடி பரிசோதனைகள் அதிகமாக செய்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி, என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அதிக பரிசோதனைகள் செய்தமைக்கு பாராட்டுகளை முன்னர் தெரிவித்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் 67 இலட்சத்து 8 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை நெருங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.