தமிழக சட்டசபை கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு

தமிழக சட்டசபை கூட்டம் நாளைக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,  நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார்  ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதன் பின்னர் தமிழக சட்டசபை கூட்டத்தை சபாநாயகர் நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்துள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை ஆரம்பமாகியது.

குறித்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும்  சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகக்கவசம்  அணிந்து  கலந்துகொண்டனர்.

இதன்போது,  தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட் தேர்வுக்கு எதிரான வாசகம் பொறிக்கப்பட்ட முகக்கவசம்  அணிந்திருந்தனர்.

இந்த ஆண்டு மரணம் அடைந்த  சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவுக்கு இன்று கூட்டத்தொடரில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,  நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் ஆகியோரின் மறைவுக்கும் உறுப்பினர்கள் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சட்டசபை கூட்டத்தை, சபாநாயகர் நாளைக்கு ஒத்திவைத்தார். 3 நாட்கள் மாத்திரம் நடைபெறும் சட்டசபையின் 2ஆவது நாள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு  ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.