
கொரோனாவை முதன்முதலில் கண்டு பிடித்து உயிரிழந்த சீன வைத்தியருக்கு ஆண் குழந்தை : மனைவி உருக்கம்
கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலில் எச்சரிக்கை விடுத்து, அந்த வைரஸாலேயே உயிரிழந்த சீன மருத்துவர் லி வென்லியாங்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
வுஹானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரான லி வென்லியாங், கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் திகதிக்கு முன்பாகவே, சார்ஸ் போன்ற புதிய வைரஸ் சீனாவில் பரவுவதாக தனது நண்பர்களிடமும், சமூக வலைதளங்களிலும் பகிர்ந்திருந்தார்.
ஆனால், லி வென்லியாங்குக்கு சம்மன் விடுத்த சீன பொலிஸார், இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று எச்சரித்தனர்.
லி வென்லியாங் எச்சரிக்கை விடுத்தது போலவே, கொரோனா வைரஸ் சீனாவில் வேகமாகப் பரவியது.
இதில் லி வென்லியாங்கின் உயிரும் பறிபோனது. இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரிடம் சீன அரசு மன்னிப்பு கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில் லீ வென்லியாங்குக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பில் அவரது மனைவி பியூ சமூக வலைத்தள பக்கத்தில் குழந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு லி வென்லியாங்கின் கடைசி பரிசு என்று பதிவிட்டுள்ளார்.
“நீங்கள் இதனை சொர்க்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? நீங்கள் எனக்கு அளித்த கடைசி பரிசு இன்று பிறந்துள்ளது. நான் அவனை அன்பாக பார்த்து கொள்வேன்.” என்று மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.