
தடையுத்தரவை மீறி யாழில் திலீபனுக்கு அஞ்சலி! கைது செய்யப்பட்டார் சிவாஜி
தடைகளை மீறி தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியதமிழ் தேசியக் கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை நடத்த நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவினர் யாழ்.நீதவான் நீதிமன்றில் தடையுத்தரவை பெற்றிருந்தனர்.
இந்நிலையில் தடைகளை தாண்டி எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் காலை தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உரும்பிராய் பகுதியில் இன்று முற்பகல் 10 மணியளவில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத் தடை உத்தரவை மீறியதால் கைது செய்யப்பட்ட அவர், கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.