கொழும்பு - சுதந்திர சதுக்க விவகாரம்- விரிவான விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறை

கொழும்பு - சுதந்திர சதுக்க விவகாரம்- விரிவான விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறை

கொழும்பு - சுதந்திர சதுக்க வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்டவர், துப்பாக்கிப் பிரயோகத்திற்காக பயன்படுத்திய சிறிய ரக கைத்துப்பாக்கியை எவ்வாறு பெற்றுக்கொண்டார் என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
 
குறித்த துப்பாக்கியை தான் கொள்வனவு செய்ததாக, மரணத்திற்கு முன்னர் அவர் தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாக, சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
இந்த நிலையில், குறித்த துப்பாக்கியை அவர் யாரிடமிருந்து கொள்வனவு செய்துள்ளார்? இல்லாவிட்டால், அவருக்கு அந்த துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்த விசாரணை மேற்கொள்வதாக காவல்துறை உயர் அதிகாரி குறிப்பிட்டார்.
 
இதேநேரம், சடலமாக மீட்கப்பட்டவரின் சகோதரரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.
 
குறித்த மரணமானது, தலையில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையினால் இடம்பெற்றது என நேற்றைய மரண விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
 
சடலம் மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அதன் அருகிலிருந்து மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாக கறுவாத்தோட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
 
சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவரினால் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, அது மீட்கப்பட்டது.
 
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என்றும், அவர் காவற்துறை  மேலதிக படை தலைமையகத்தில் தற்காலிகமாக வசித்து வந்தவர் என்றும்  குறிப்பிடப்படுகிறது.