திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்பில் ஆராய்வு

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்பில் ஆராய்வு

ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் நிலைமை தொடர்பில், அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பில், அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்பில், நேற்றைய தினம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமனற் உறுப்பினர் ஈ.சரவணபவன் உள்ளிட்ட மேலும் சிலர் இணைந்து யாழ்ப்பாணத்தில் முக்கியமான கலந்துரையாடலை நடத்தியிருந்தனர்.

நினைவேந்தலுக்கு அனுமதியளிக்குமாறுகோரி, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில், நேற்றைய தினம் இரண்டு நகர்த்தல் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் மீதான விசாரணையை மேற்கொண்ட நீதவான், மத அனுட்டானங்களை கடைபிடிப்பதற்கு அனுமதியளிக்கப்படும் என தெரிவித்ததுடன், திலீபன் தடைசெய்யப்பட்ட அமைப்பை பிரதிநிதித்துவம் செய்ததன் காரணமாக அவரை, நினைவுகூற அனுமதிளிக்க முடியாது என்று தெரிவித்து, நினைவேந்தலுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேநேரம், மன்னார் மற்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றங்களும் தடை விதித்து உத்தரவுகளை பிறப்பித்திருந்தன.

1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி, ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து திலீபன் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து 11 நாட்களின் பின்னர் உயிர்துறந்தார்.

இதையடுத்து, வருடாந்தம் செப்டம்பர் 15 ஆம் திகதி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இதற்கமைய, இந்த ஆண்டு திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவேந்தலுக்காக, நல்லூரில் உள்ள திலீபனின் நினைவிடத்தில் உருவப்படம் உட்ட்ட நினைவேந்தல் பதாதைகள் அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

எனினும், திலீபனின் நினைவேந்தருலுக்கு தடை விதிக்கக்கோரி யாழ்ப்பாணம் காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவுக்கு அமைய, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம் தடை உத்தரவை பிறப்பித்தருந்தது.

இதையடுத்து, நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் உள்ளிட்ட நினைவேந்தல் பதாதைகள், காவற்துறையினால் அகற்றப்பட்டதுடன், பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடி கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.