வவுனியாவில் அரச காணிகளை அபகரித்து விற்பனை செய்யும் தனிநபர்!

வவுனியாவில் அரச காணிகளை அபகரித்து விற்பனை செய்யும் தனிநபர்!

அரச காணியை அத்துமீறி அபகரித்து விற்பனை செய்யும் நபரை கைது செய்யுமாறு வவுனியா தாண்டிக்குளம் மக்கள் கோரியுள்ளனர்.

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வீதியோரக் காணியை அபகரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்து வரும் நபர் தொடர்பான தகவல்களையும் பொதுமக்கள் வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா - தாண்டிக்குளம் புகையிரத நிலைய வீதியோரத்தில் காணப்படும் வீதி அபிவிருத்தித் திணைக்களம், புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான 182 ஆவது கிலோ மீற்றர் மைல்கல் வரையான வீதியோரக்காணிகளை, மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் தனி நபர் ஒருவர் அத்து மீறி அபகரித்து வருகின்றார்.

இவ்வாறு அபகரிக்கும் காணிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்தும் வருகின்றார்.

இவ்வாறு செயற்பட்டு வரும் நபர் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் குறித்த நபரைக் கைது செய்து அவர் மீது எவ்விதமான நடவடிக்கையும் பொலிசார் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எனவே அரச காணியை அபகரித்து விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றி வரும் குறித்த நபரைக் கைது செய்து அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரியுள்ளனர்.

அந்த நபர் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் கொக்குவெளி பகுதியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணிகள் சிலவற்றை அபகரித்து பிற பகுதிகளில் வசித்துவருபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.