முதலாம் திகதியிலிருந்து சந்தைகளில் 10% கழிவு அறவிடப்படுவது நிறுத்தப்படும் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

முதலாம் திகதியிலிருந்து சந்தைகளில் 10% கழிவு அறவிடப்படுவது நிறுத்தப்படும் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து சந்தைகளில்  10% கழிவு அறவிடப்படுவது நிறுத்தப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ் மாவட்ட விவசாய அமைப்புக்களினால் சந்தைகளில் 10% கழிவு அறவிடப்படும் நடைமுறையை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு அமைவாக இதனை உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் ஏனைய பிரதேசங்களில் இவ்வாறான நடைமுறை இல்லை என்ற விடயத்தினை குறிப்பிட்ட விவசாய அமைச்சர், வடக்கு மாகாண அதிகாரிகளுக்கு அதனை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்

இது தொடர்பில் யாழ் மாவட்ட விவசாய குழுவின் தலைவரிடம் வினவியபோது, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக கடிதம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து குறித்த நடைமுறை பின்பற்றப்படமாட்டாது எனவும், விவசாயிகளின் கோரிக்கைக்கு இதன் மூலம் தகுந்த தீர்வு கிடைக்கும் எனவும் மேலும் தெரிவித்தார்

இந்தநிலையில் விவசாய அமைச்சர் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட  தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து யாழ் மாவட்டத்தில் சந்தைகளில் அறவிடப்படும் 10 % கழிவு முதலாம் திகதிக்கு பின்னர் அறவிடப்படமாட்டாது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் குறிப்பிட்டார்.