
சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையானது 77 இலட்சத்து 39,831 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொவிட் 19 தொற்று காரணமாக 428,337 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணித்தியாலங்களில் மெரிக்காவில் புதிதாக 27,221 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அங்கு இதுவரையில் 21 இலட்சத்து 16,922 பேர் குறித்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அமெரிக்காவில் புதிதாக 791 பேர் உயிரிழந்ததோடு, அங்கு மொத்தமாக இதுவரையில் 116,825 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 24,253 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அங்கு கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 829,902ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை பிரித்தானியாவில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அங்கு இதுவரையில் 41,481 பேர் குறித்த தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். மொத்தமாக பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 92,950ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,458 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் ஊடாக அந்நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 8,993 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளாகி அதிகம் பாதிப்புக்கு உள்ளான நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரையில் 8,884 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்தியாவில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து ஒரு இலட்சத்து 54,330 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு, நூற்றுக்கு 50 சதவீதமானோர் குறித்த தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.