ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கு கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு

ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கு கோட்டாபயவின் முக்கிய அறிவிப்பு

பொது மக்களுக்கு தமது முறைப்பாடுகளை அல்லது மனக் குறைகளை அலுவலகத்திற்கு வருகை தந்து தனிப்பட்ட முறையில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக்குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்திற்கு 'ஒம்புட்ஸ்மன்' குறைகேள் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க ஒம்புட்ஸ்மன் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்வாக அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது அரச அதிகாரிகள் பொறுப்பிலிருந்து விலகியிருந்தால் அல்லது அதனை தாண்டி செயற்பட்டிருந்தால் அதன் மூலம் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் அல்லது அழுத்தங்கள் ஏற்பட்டிருக்குமானால் அது பற்றி கண்டறிந்து தீர்வுகளை வழங்குவது ஒம்புட்ஸ்மன் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கமாகும்.

கொழும்பு 01, ஜனாதிபதி மாவத்தையில் உள்ள பழைய சார்ட்டட் வங்கிக் கட்டிடத்தின் 03வது மாடியில் இவ்வலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தமது முறைப்பாடுகளை அல்லது மனக் குறைகளை அலுவலகத்திற்கு வருகை தந்து தனிப்பட்ட முறையில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அல்லது 'ஜனாதிபதி அலுவலகத்தின் ஒம்புட்ஸ்மன், ஜனாதிபதி அலுலவகம், கொழும்பு 01' என்ற முகவரிக்கு தபால் மூலம் முறைப்பாடுகளையும் மனக்குறைகளையும் முன்வைக்க முடியும்.

011-2338073 என்ற தொலைபேசி/தொலைநகல் இலக்கத்திற்கு அல்லது ombudsman@presidentsoffice.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது முறைப்பாடுகளை அனுப்பிவைக்க முடியும்.

மக்களின் இயல்பு வாழ்க்கையை அமைதியாக பேணுவதற்கு தடையாகவுள்ள பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல், சூழலுக்கு பாதிப்பான விடயங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் முறைப்பாடுகளை தமக்கு அனுப்பி வைக்க முடியும் என ஒம்புட்ஸ்மன் எஸ்.எம். விக்ரமசிங்க தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.