
யாழில் துயரம் -பாம்புக் கடிக்கு இலக்கான சிறுவன் பரிதாப மரணம்
பாம்பு கடிக்கு இலக்கான சிறுவன் சிகிச்சை பலனின்றி சில மணி நேரத்திலேயே உயிரிழந்த பரிதாப சம்பவம் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியை சேர்ந்த செல்வம் ஜசிந்தன்(வயது 17) என்ற பாடசாலை மாணவனேஉயிரிழந்தவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வட்டுக்கோட்டை தெற்குப் பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுவன் நேற்று மலசல கூடத்திற்கு சென்றுள்ளார்.அப்போது மலசல கூடத்தில் வைத்து சிறுவனை பாம்பு தீண்டியுள்ளது.
பாம்பு கடிக்கு இலக்கான சிறுவன் தனது தாயாரிடம் சென்று பாம்பு கடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.எனினும் தாயார் விஷப்பூச்சி ஏதாவது கடித்திருக்கலாம் என அலட்சியமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சிறிது நேரத்தில் சிறுவன் மயக்கமடைந்துள்ளார்.இதனை அவதானித்த சிறுவனின் உறவினர்கள் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சில மணி நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.