
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டம் தொடர்பில் நிரந்தரத் தீர்வு : அங்கஜன் உறுதி!
யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்படும் என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
வீட்டுத்திட்டம், மீள்குடியேற்றம், காணிகொள்வனவு மற்றும் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் கட்டுமானங்கள் காலதாமதம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று தெல்லிப்பளை பிரதேச செயகத்தில் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றம் மற்றும் வீட்டுத்திட்டம் சம்மந்தமான பிரச்சனைகள் தொடர்பில் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு நிலமைகள் தொடர்பில் அறிந்து கொண்டுள்ளார்.
அவர்களுக்கு நானும் யாழ் மாவட்டத்தின் வீடமைப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் விளக்கம் தெரிவித்திருந்தேன். அந்த விடயம் தொடர்பில் அதிகூடிய கரிசனை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த உறுதியளித்தார்.
அது மட்டுமின்றி வீடமைப்பு தொடர்பான அமைச்சராக இருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்கள் வடபகுதி மக்களின் வீட்டுத்திட்ட பிரச்சனை தொடர்பில் அதி கூடிய கவனம் செலுத்தியுள்ளார்.
எமது இந்த புதிய அரசாங்கம் மூலம் விரைவில் காணி அற்றவர்களுக்கான காணி கொள்வனவு, வீடுகள் இல்லாமல் தவிப்போருக்கான வீட்டுத்திட்டங்களை இனம்கண்டு வழங்கல், நலன்புரி நிலையங்களில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடுகள் வழங்கல் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகள் பெற்று மக்களுக்கு கொடுப்போம்.
10 இலட்சம் பெறுமதியான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்ட 70 குடும்பங்களின் வீட்டுத்திட்ட கட்டுமான செயற்பாடுகள் பிந்திய நிலமையில் காணப்படுவதன் காரணங்கள் கண்டறியப்பட்டு விரைவாக கட்டுமான பணிகளை முடிவுறுத்த பயனாளிகளிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றும் அரசாங்கத்தினால் காணி இல்லாதோரிற்கு இலவச காணி கொள்வனவிற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் தமக்கு தேவையான காணிகள் இனம்காண்பதற்கு காலதாமதம் ஆகின்றது என தெல்லிப்பளை பிரதேச செயலகர் எஸ். சிவஶ்ரீ சுட்டிக்காட்டினார்.
ஒதுக்கப்பட நிதி தங்களது கால தாமத்தால் திரும்ப சென்றால் தமக்கு மட்டுமல்ல அடுத்தகட்டம் இனங்காணப்படவுள்ள பயனாளிகளுக்கும் நிதியை பெற்றுக்கொள்ளாமல் போய்விடும். அதனால் விரைவாக காணிகளை இனம்காணுமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக (காணி) அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன், தெல்லிப்பளை பிரதேச செயலகர் எஸ் சிவஶ்ரீ, பிரதேச திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவகர்கள், அரச அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.