
மூலிகை மருத்துவ முறைமைக்கு அனுமதி வழங்கிய உலக சுகாதார ஸ்தாபனம்
ஆபிரிக்க மூலிகை மருத்துவ முறைமை பிரயோகத்தின் மூலம், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஏனைய தொற்று நோய்களுக்கான மாற்று மருந்துக்களை கண்டுபிடிப்பதற்கான சாத்தியமான பரிசோதனைகளை மேற்கொள்ள உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளது
ஆசியா, ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் உள்ள மருத்துவ ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்படும் மூலக்கூறுகளுக்கு அமைவான முறையில் மூலிகை மருத்துவ முறைமையின் மூலம் பெறப்படும் மாற்று மருந்துகளும் சிறப்பான பலனை கொடுக்கும் தன்மையை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மடகஸ்காரில் ஏற்பட்ட மலேரியா தாக்கத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ஆட்டீமிசியா என்ற வகையான செடியில் இருந்து பெறப்பட்ட சாற்றினை தொற்றாளர்களுக்கு பிரயோகித்ததில் வெற்றி காணப்பட்டது.
அதற்கு அமைய மடகஸ்கார் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மூலிகை மருத்துவ முறைமையை கொண்டு மாற்று மருந்தினை இனம்காணும் செயல்பாடுகள் தற்போது துரிதகதியில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் பலர் குணமடைந்துள்ளனர்
கடந்த இரண்டு நாட்களுக்குள் புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட, சுகமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய சுகாதாரதுறை அமைச்சினால் வெளியிடப்பட்ட இன்றைய அறிக்கையில், கடந்த 24 மணி நேர காலப்பகுதியினில், 94 ஆயிரத்து 612 பேர் பூரண சுகம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக தாக்கிய காலத்தில் வெளிமாவட்டங்களில் பணியாற்றிய பணியாளர்களை அழைத்துச் செல்வதற்காக பல தொடரூந்துக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
அப்படியாக அழைத்துச் செல்லப்பட்டவர்களில், இந்த மாதம் 9 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியினில் மட்டும் 97 பேர் தொடரூந்து பயணத்தின் போது மரணித்துள்ளனர்
இந்த தகவலை, இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய தொடரூந்து துறை அமைச்சர் பியூஷ் கோயால் தெரிவித்துள்ளார்.