
களப்பு பகுதியூடாக சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய கடத்தல்!
கிளிநொச்சி குடமுருட்டி பாலம் களப்பு ஊடாக இயந்திர படகில் கேரள கஞ்சாவை எற்றி சூட்சுமமான முறையில் பாரிய சட்டவிரோத கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிசாரால் 77.300 கிலோகிராம் எடையுடைய கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலைய மது ஒழிப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலிற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி பிரதி பொலிஸ்மா அதிபர் சம்பத் குமார லியககேயின் உத்தரவிற்கு அமைவாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிசாந்த சந்திரசேகரவின் கண்காணிப்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் புஸ்பகுமார மற்றும் கிளிநொச்சி தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீவகஸ்த சிறிசேன ஆகியோரின் வழிநடத்தலில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவை மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி ஊடாக வேறு பகுதிகளிற்கு கடத்தப்படுவதற்காக எடுத்துவரப்பட்ட சந்தர்ப்பதிலேயே பொலிசார் சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர். இதன்போது சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது 77.300 கிலோ கிராம் கஞ்சா, இரண்டு கையடக்க தொலைபேசிகள், படகு மற்றும் 40 கோஸ் பவர் கொண்ட இயந்திரம் ஆகியன பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில் சான்று பொருட்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.