
அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய விமானம்! பயணிகளுக்கு நேர்ந்த துயரம்
அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹோர்ஷூபே நகரிலிருந்து லூசியானா மாகாணத்திற்கு சிறிய ரக விமானம் ஒன்று இரு பெண்கள் உட்பட நான்கு பேருடன் புறப்பட்டுச் சென்றது.
விமானம் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகருக்கு அருகே வானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானி அருகில் உள்ள விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, உரிய அனுமதியை பெற்று விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார்.
இவ்வாறு அவசரமாக தரையிறக்கிய போது சற்றும் எதிர்பாராத வகையில் குறித்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.