சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்க விசேட வேலைத்திட்டம்
எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் தொடர்பில் சட்டவிரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகளை தடுக்க காவல்துறையினர் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். அதன்படி துண்டு பிரசுரங்கள், கண்காட்டி ஆவணங்கள், பிரசார சுவரொட்டிகள், வேட்பாளர் படங்கள், சின்னங்கள் மற்றும் கட்சியின் கொடிகளை காட்சிபடுத்துவது தொடர்பிலான விசேட செயற்பாடு ஒன்று இன்று ஆரம்பிக்கவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பதில் காவல்துறைமா அதிபரின் உத்தரவின் கீழ், இந்த நடவடிக்கையானது நாட்டிலுள்ள அனைத்து காவற்துறை பிரிவுகளையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படவுள்ளது.
வீதித் தடைகள், நடமாடும் சேவைகள் மற்றும் உந்துருளி போக்குவரத்தின் ஊடாக வீதிகளில் பயணிக்கும் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் சட்டவிரோதமாக ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பிரசார சுவரொட்டிகள் இதன்போது அகற்றப்படவுள்ளன.
மேலும் ஏதேனும் கட்சிகளின் சின்னம், வேட்பாளர் புகைப்படம், வேட்பாளர் இலக்கம் அல்லது கட்சிகளின் அடையாளம் ஆகியன வாகனங்களில் ஒட்டப்பட்டிருந்தால், தேர்தல்கள் சட்ட விதிமுறைகளின் படி குறித்த வாகன உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.