பாடசாலைகளை திறப்பது குறித்து முதலமைச்சரின் அறிவிப்பு

பாடசாலைகளை திறப்பது குறித்து முதலமைச்சரின் அறிவிப்பு

பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து பாடசாலைகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின்னர் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு இதுவரை ரூ.7,800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா சிகிச்சை மையங்களில் வசதிகள் சிறப்பாக உள்ளதா என ஆய்வு செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொழில்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வேளாண் உற்பத்தியை வரலாறு காணாத அளவு அதிகரிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெற்றோரின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, மருத்துவக்குழுவுடன் ஆலோசித்து பாடசாலைகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

தரம் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களுக்கு தீர்வு காண ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பாடசாலைகளுக்குச் செல்லலாம் என்ற வர்த்தமானி அறிவித்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்கள் பாடசாலைகளுக்கு செல்வது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு எடுக்கப்படும்” என இவ்வாறு அவர் கூறினார்.