சிரியாவில் 46 இலட்சம் குழந்தைகள் உணவு இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்!

சிரியாவில் 46 இலட்சம் குழந்தைகள் உணவு இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்!

சிரியாவில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 46 இலட்சம் குழந்தைகள் உணவு இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என ‘சேவ் த சில்ட்ரன்’அமைப்பு தெரிவித்துள்ளது.

‘சேவ் த சில்ட்ரன்’அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சிரியாவில் ஊட்டச்சத்து உள்ள உணவான அப்பிள், ஒரேஞ், வாழைப்பழம் போன்ற பழவகைகள் 65 சதவீத குழந்தைகளுக்கு கடந்த 3 மாதங்களாக கிடைக்கவில்லை என கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடகிழக்கு சிரியாவில், சுமார் 25 சதவீத குழந்தைகள் குறைந்தது 9 மாதங்களாக பழவகைகளை சாப்பிடவில்லை என்று கூறியுள்ளனர்.

அங்கு வாழும் 8 குழந்தைகளில் ஒருவர் ஊட்டசத்து குறைபாட்டால் வாழ்நாள் முழுவதும் உடல்நலக் குறைவை எதிர்கொள்கின்றனர். குழந்தைகளை காப்பாற்ற சர்வதேச சமூகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிரியாவில் கடந்த 6 மாதத்தில் நாடு முழுவதும் உணவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையானது 46 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் என ‘சேவ் த சில்ட்ரன்’அமைப்பு தெரிவித்துள்ளது.