
சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கியுள்ள விசேட சலுகை!
க.பொ.த உயர்தரத்தின் தேசிய தொழில் தகைமை பாடநெறியின் கீழ் தரம் 12 இற்கு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் அனைத்து வலயக்கல்விப் பணிமனைகளை உள்ளடக்கும் வகையில் 423 பாடசாலைகளில் மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளனர்.
தகுந்த பாடசாலையை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பமும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களும் இதன் மூலம் நன்மையடைய முடியுமென கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பாடநெறியின் கீழ் உடற்கல்வி மற்றும் விளையாட்டு, கைவினை கலை, உள்ளக வடிவமைப்பு, அரங்கக்கலை, குழந்தை உளவியல் மற்றும் பாதுகாப்பு, பெருந்தோட்ட பயிர்ச்செய்கை உற்பத்தி, தொழில்நுட்பக் கல்வி மற்றும் கிராபிக் வடிவமைப்பு உள்ளிட்ட 26 பாடநெறிகள் அடங்குகின்றன.
இது குறித்த மேலதிக தகவல்களை 011 22787136 அல்லது 011 2786746 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து பெற்றுக் கொள்ள முடியும்.
இதேவேளை www.moe.gov.lk எனும் கல்வி அமைச்சின் இணையத்தள முகவரிக்கு பிரவேசித்தும் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.