கொரோனா தொற்று ஏற்பட்டால் அப்பகுதியில் வாக்களிப்பு இரத்து

கொரோனா தொற்று ஏற்பட்டால் அப்பகுதியில் வாக்களிப்பு இரத்து

பொதுத் தேர்தல் வாக்கெடுப்பின் போது ஏதாவது ஒரு பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் நிலை ஏற்பட்டால், குறித்த பகுதியில் வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறு வாக்கெடுப்பு இரத்துச் செய்யப்படும் பிரதேசத்தில் மீள் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதனால் தேர்தல் பெறுபேறு வெளியாகுவதில் தாமதம் ஏற்படுமென ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சமூக ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் இல்லையென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் சில வேளைகளில் வைரஸ் பரவலானது திடீரென ஏற்படுமிடத்து, மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்று நடவடிக்கை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தயார்நிலையில் உள்ளது.

இதேவேளை, இம்முறை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பதாகைகள், கட்டவுட், சுவரொட்டிகளை பயன்படுத்த முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறிப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டால், அவற்றை அகற்றும் உரிமை மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் பிரசாரங்களுக்கென ஐம்பது பேரை மட்டுப்படுத்தி சிறிய கூட்டங்களை அதிகளவில் நடத்தமுடியுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.