
தமிழர் விவகாரத்தில் இந்தியாவை இலங்கை அவமதித்து உள்ளது- ராமதாஸ்
இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியாவை இலங்கை அவமதித்து உள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா - இலங்கை இடையிலான இரு தரப்பு உறவுகள் குறித்து இரண்டு நாடுகளின் பிரதமர்ளுக்கு இடையில் கடந்த 26 ஆம் திகதி தொலைகாணொளி ஊடாக கலந்துரையாடியினர்.
அதன்போது இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் அளித்தல், யுத்தத்திற்கு பின்னரான சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, சுயமரியாதை ஆகியவற்றுடன் வாழ வகை செய்யவேண்டும் என்று இலங்கை பிரதமரிடம், இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
அதையேற்ற இலங்கை பிரதமர், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகளை முழுமையாகச் செயல்படுத்துவதன் மூலம் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற தமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்திருந்தார்.
எனினும் பின்னர் இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தோ, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவது குறித்தோ எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவை இலங்கை அவமானப்படுத்தியுள்ளதாக அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த அவமரியாதைகளை இந்தியா எப்படி எடுத்துக் கொள்ளபோகிறது என்பதுதான் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்பாகும்.
இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், இலங்கை தமிழர்களுக்கு போதிய அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட விடயங்களில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.