தனுஸ்கோடி அருகே கரையொதுங்கிய இராட்சத இறப்பர் உருளை

தனுஸ்கோடி அருகே கரையொதுங்கிய இராட்சத இறப்பர் உருளை

தனுஸ்கோடி அருகே அரிச்சல் முனை கடல் பகுதியில் நேற்று விசித்திரமான இறப்பர் உருளை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தமிழக கடலோர காவல்த்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற நாட்டு படகு மீனவர்கள் அரிச்சல் முனை அருகே இராட்சத இறப்பர் உருளை கரை ஒதுங்கியுள்ளதாக தனுஸ்கோடி தமிழக கடலோர காவல் குழும பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்க்குச் சென்ற பொலிஸார் குறித்த இறப்பர் உருளை தொடர்பாக சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட உருளையை கரைக்கு கொண்டு வர முயறச்சித்த பொலிஸார் காற்றின் வேகம் அதிகரித்தமையின் காரணமாக சிரமங்களுக்கு மத்தியில் கரை கொண்டு சேர்த்தனர்.

இந்நிலையில் குறித்த இறப்பர் உருளையானது சுமார் 15 அடி உயரமும் 6 அடி விட்டமும் கொண்டதுடன் சுமார் 3 தொன் எடை கொண்டதாக இருக்கும் என இராமேஸ்வரம் கடலோர காவல் குழும ஆய்வாளர் கனகராஜ் தெரிவித்தார்.

இவ்வாறு கரை ஒதுங்கிய உருளை ஆழ்கடலில் செல்லும் கப்பல்களில் மிதவையாகவோ அல்லது துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல் ஒன்றோடு உன்று மோதி சேதமடையாமல் தடுக்கும் உருளையாகவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் இந்த வகையான இறப்பர் உருளை தூத்துக்குடி துறைமுகத்தில் பயன்பாட்டில் இல்லை என்பதால் இலங்கை துறைமுகத்திற்கு வந்த கப்பல்களில் இருந்து தவறி விழுந்து தனுஸ்கோடி கடற்பகுதிக்குள் வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் பாதுகாப்பு வட்டாரங்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

இராட்சத இறப்பர் உருளை சிக்கியமையானது தனுஸ்கோடி கடலோர கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.