
நண்பர்களுடன் சென்ற இலங்கை தமிழ் அகதி சிறுவனுக்கு நேர்ந்த கதி -பெரும் சோகத்தில் குடும்பம்
தமிழகத்தில் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற இலங்கை தமிழ் மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த நரசிம்மன் மகன் தனுசுராஜ் (17) பிளஸ் 2 படித்து வந்தார். தனுசுராஜ் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் 6 பேருடன் ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் அருகே உள்ள நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றுக்கு சென்றார். பின்னர் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.
இதில் தனுசுராஜ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. மேலும் அவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து நண்பர்கள் அனைவரும் குளித்துவிட்டு கரைக்கு திரும்பினர். ஆனால் தனுசுராஜ் வரவில்லை, பின்னர் அவர் ஆற்றில் மூழ்கியதை கண்டனர். இதன்காரணமாக அதிர்ச்சி அடைந்த அவர்கள் பீதியில் செய்வதறியாது அவரவர் வீடுகளுக்கு திரும்பினர்.
இது குறித்து பெற்றோருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இருந்து தனுஷ்ராஜ் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து தனுசுராஜ் சடலத்தை பொலிசார் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.