
தென்காசியில் ஆற்றில் தவறி விழுந்த மாணவன் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் காசிதர்மம் புதுமனை தெருவில் வசித்து வருபவர் குமார். இவரது மகன் தனபால் (வயது 18). இவர் பிளஸ்-2 படித்துள்ளார். கல்லூரியில் சேர ஏற்பாடு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சடையப்பபுரத்தில் உறவினர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்பொழுது உறவினர்கள் யாரும் வீட்டில் இல்லாததால், அவர்களை தேடி தோட்டத்திற்கு சென்றுள்ளார். தோட்டத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஆற்றில் அவர் குளிப்பதற்காக இறங்கி உள்ளார். இதில் கால் தடுமாறி விழுந்த தனபால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.