
கொரோனா வைரஸ் அச்சம்: கேரளாவின் 3 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த, கேரளாவின் 3 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் ஒரு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த 24மணி நேரத்தில் தலா 1000க்கும் மேலானோர்க்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே 5பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக் கூடாது என கூறப்பட்டுள்ளது.
எனினும், பேருந்து மற்றும் பொது போக்குவரத்து, கடைகள், வங்கிகள், அரச அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும். மாணவர்களுக்கான தேர்வுகள் நடக்கும். இறுதிச் சடங்குகளில் 20 பேரும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் கலந்து கொள்ளலாம். மதம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் 20 பேர் வரை பங்கேற்கலாம். ஹோட்டல்கள், கடைகள் போன்றவற்றில் 5பேருக்கு மேல் இருக்க அனுமதி இல்லை. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் புதிதாக 9,258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் புதிதாக 22பேர் தொற்றுக்கு உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 742 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் மொத்தம் 2.13 இலட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பு அடைந்துள்ளனர். 1.35இலட்சம் பேர் கொரோனாவிலிருந்து இதுவரை குணமடைந்துள்ளனர். 77,482பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.