
வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர் பேச்சு!
பிரெக்ஸிற்க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வென் டெர் லேயன் ஆகியோர் ஒப்புக் கொண்டுள்ளனர் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என அவர்கள் ஒப்புக்கொண்டபோதும் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இடைவெளிகளைக் குறைக்கும் முயற்சிக்காக இருவரும் தீவிரமாக வேலை செய்ய தங்கள் தலைமை பேச்சுவார்த்தையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் எட்டப்படாமல் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவுக்கு வந்தது.
மீன்பிடி மற்றும் அரசாங்க மானியங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களில் சமரசம் செய்ய இரு தரப்பினரும் அழைப்பு விடுக்கின்றனர்.
இந்நிலையில் தொலைபேசி மூலம் நேற்று சனிக்கிழமை கலந்துரையாடிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வென் டெர் லேயன் ஆகியோர் இது தொடர்பாக கலந்துரையாடியதுடன் ஒரு பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும் ஒப்புக்கொண்டனர்.
எனவே எதிர்காலத்தில் ஒரு மூலோபாய ஐரோப்பிய ஒன்றிய- பிரித்தானிய உறவுக்கு வலுவான அடிப்படையாக ஒரு ஒப்பந்தத்தைக் கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தை இருவரும் ஒப்புக் கொண்டதாக டவுனிங் தெரு ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.