முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்! விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர்

முல்லைத்தீவு ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்! விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அமைச்சர்

முல்லைதீவில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் சட்டவிரோத மரக்கடத்தல்காரர்களினால் தாக்கப்பட்டமை குறித்து அறிக்கை ஒன்றை அரசாங்கம் கோரியிருப்பதோடு பக்கச்சார்பற்ற விசாரணை ஒன்றை நடத்தும்படியும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

முறிப்பு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தலைமையிலான குறித்த குழு சட்டவிரோத மரக்கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றது. அந்தப் பகுதியில் காணப்படுகின்ற தேக்கு மற்றும் முதிரை மரங்களைக் கடத்தும் நடவடிக்கையை வழமையாகக் கொண்டு செயற்படும் அந்தக்குழு அடிதடி வன்முறையில் ஈடுபட்டுவரும் வழக்கத்தையும் கொண்டு காணப்பட்டுவந்திருக்கிறது.

இலங்கை தேசிய மரக்கூட்டுத்தாபனம் ஒன்றின் உப ஒப்பந்ததாரராகிய பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கான மரம் ஏற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுவரும் குறித்த குழு தமக்கு காப்பரணாக குறித்த நிறுவத்தினையும் மரக்கூட்டுத்தாபனத்தினையும் பயன்படுத்தி வந்திருக்கின்றது.

மேலும் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முறிப்புக் கிராமத்தில் மாபியாக்கள் போல செயற்படும் நான்கு பேர் கொண்ட வன்முறைக் குழு ஒன்று ஊடகவியலாளர்கள் இருவரை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியதுடன் அவர்களிடம் இருந்த சொத்துக்களையும் அபகரித்துள்ளது.