யாழில் 76 வர்த்தகர்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு சென்ற இரகசிய தகவல்

யாழில் 76 வர்த்தகர்கள் தொடர்பில் அதிகாரிகளுக்கு சென்ற இரகசிய தகவல்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை செய்தமை தொடர்பாக 76 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் வடக்கு மாகாண பதில் உதவி பணிப்பாளர் ஏ.எல்.யவ்பர் சாதிக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர்,

'தற்போது உள்ள கொரோனா தொற்று அனர்த்த நிலைமை காரணமாக பருப்பு, சீனி மற்றும் ரின்மீன் ஆகிய பொருட்களின் இறக்குமதி வரி விலக்கப்பட்டு பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் யாழ் மாவட்டத்தில் இப் பொருட்கள் கட்டுப்பாட்டு விலையில் விற்பனை செய்யப்படவில்லை எனவும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினருக்கு இன்று வரை 76 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கிடைக்கப் பெற்ற இரகசிய முறைப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்.

அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையங்களிற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் சென்று ஆராய்ந்தபோது, வர்த்தகர்கள் தாம் பழைய விலைக்கு கொள்வனவு செய்து இருப்பில் உள்ள பொருட்களை பழைய விலைக்கு விற்பனை செய்வதாகவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய விலைக்கு கொள்வனவு செய்யும் பொருட்களை அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைமைக் காரியாலயத்தினருடன் கலந்தாலோசித்து வருகிறோம்" என்றார்.