
ஐ.பி.எல்.: ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேறுகிறது சென்னை அணி!
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 37ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.
அபுதாபியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும், டோனி 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர், கார்திக் டியாகி, ஸ்ரேயாஸ் கோபால் மற்றும் ராகுல் டிவெட்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 126 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, 17.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் ராஜஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காது 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
சென்னை அணியின் பந்துவீச்சில், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹெசில்வுட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 48 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 7 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த தோல்வியின் மூலம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பினை இழந்தது. இதுவரையான ஐ.பி.எல். வரலாற்றில் மூன்று முறை சம்பியனான சென்னை அணி, பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளமை இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.