கொரோனாவைப் போலவே டெங்கு நோயிலும் கவனம் செலுத்த வேண்டும் : யமுனாநந்தா!

கொரோனாவைப் போலவே டெங்கு நோயிலும் கவனம் செலுத்த வேண்டும் : யமுனாநந்தா!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போலவே டெங்கு நோய் பரவல் குறித்தும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதைய டெங்கு தொற்றுப்பரவல் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சி.யமுனாநந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“தற்போது டெங்கு நோயானது யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள பரவ ஆரம்பித்துள்ளது. நேற்று மாத்திரம் 5 பேர்  டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் பாசையூர், சுழிபுரம் சுன்னாகம், அரியாலை மற்றும் கோப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள்.

தற்போது மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் நுளம்பு பெருக்கம் அதிகமாக காணப்படும், எனவே  யாழ் மாவட்ட மக்கள் சுற்றுச் சூழலினை மிகவும் தூய்மையாக பேண வேண்டியதும் அவசியமாகும்.

தற்போது நாட்டில் கொரோனா தொற்றும் அதிகரித்துள்ள நிலையில் டெங்கு தொற்றும் ஏற்படுமாயின் இரட்டை நோய் தொற்று ஏற்படலாம்.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சையளிக்க வைத்தியசாலைகள்  நெருக்கடிக்குள்ளாகும்.

எனவே பொது மக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் டெங்கு பெருகும் சூழலை எமது பிரதேசத்தில் இல்லாமல் செய்வதன் மூலமும்  டெங்கு தொற்று ஏற்படுவதனை தடுக்க முடியும்” என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா மேலும் குறிப்பிட்டுள்ளார்.